தேசிய செய்திகள்

தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன் - டெல்லி ஐகோர்ட் உத்தரவு

சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது இவர் தேசிய பங்குச்சந்தை விவரங்களை ஏஜன்டுகளுக்கு முன்கூட்டியே கசியவிட்டது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது.

மேலும் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆனந்த் சுப்பிரமணியன், சித்ரா ராமகிருஷ்ணா இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

SCROLL FOR NEXT