புதுடெல்லி,
டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக, உத்தரகண்ட் மாநில காவலர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் நீட் தேர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் காவலராக பணியாற்றி வந்தவர் செர் சிங். இவர் இன்று டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட களத்திற்கு நேரில் வந்தார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு அவர் தனது ஆதரவை தெரிவித்தார்.
போராட்ட மேடையில் மைக் பிடித்த காவலர் ஷெர் சிங், இது பகத் சிங்கின் தேசம்; புரட்சி என்பது குண்டுகளாலோ அல்லது துப்பாக்கிகளாலோ ஏற்படுவதில்லை… இந்த ரவுடிகளை நாம் எதிர்கொள்வோம். புரட்சி என்பது சிந்தனைகளில் இருந்து பிறக்கிறது, சிந்தனைகள் என்றும் இறப்பதில்லை. என்று ஆவேசமாக பேசினார். இந்த வரிகளைக் குறிப்பிட்ட அடுத்த கணமே, தனது காவல் துறை அடையாள சின்னமான பேட்ஜை அங்கேயே கழற்றி வீசினார்.
தொடர்ந்து, மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவர் தனது காவலர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான ராஜினாமா கடிதத்தை, சி.ஜே.பி. தலைவர் அபிஜீத் தீப்கேவிடம் நேரில் வழங்கினார். ஆனால், அவர் கடந்த ஜூன் 28 முதல் பணிக்கு வராததால் ஜூலை 20-ஆம் தேதியே இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டார் என உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், அவர் ஒரு குற்ற வழக்கில் சிறை சென்றவர் ஆவார். தற்போது பிணையில் வெளியே உள்ளார். இந்த சம்பவம் டெல்லி போராட்ட களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.