புதுடெல்லி
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில், அதனை குறிக்கும் வகையில் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்து உள்ளார்.
இந்த திட்டத்தின்படி, 12 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய மஜ்லிஸ் பார்க் முதல் மாஜ்பூர் வழித்தடம் வரை மற்றும் 9 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய மஜ்லிஸ் பார்க் முதல் தீபாலி சவுக் வழித்தடம் வரை என இந்த வழித்தடங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலருக்கும் இந்த திட்டம் பெரிய அளவில் பயன் அளிக்கும்.
இதுபோக கூடுதலாக, வசீராபாத் மற்றும் பஜன்புரா பகுதிகளுக்கும் மெட்ரோ ரெயில் வசதிகள் வரவுள்ளன. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-மந்திரி ரேகா குப்தா, இந்த திட்ட விரிவாக்கத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொண்டார். அதனுடன், மகளிரின் பாதுகாப்பில் இந்த விரிவாக்கம் ஒரு பெரிய பரிசு என்றும் அப்போது கூறினார்.