டெல்லி,
கொலை குற்றவாளியான ஹரூன் சைபி கஜூரி காஸ் என்ற இடத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
டெல்லியின் பகீரதி விஹாரைச் சேர்ந்த வாலிபர் ஹரூன் சைபி (வயது 24). இவர் ரசீத் என்பவரை கொலை செய்ததற்காக தயால்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் சைபி கைது செய்யப்படாததால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஹரூன் சைபி வடகிழக்கு டெல்லியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் சிக்னேச்சர் பாலம் மற்றும் கஜூரி காஸ் மெட்ரோ நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கஜூரி காஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்தது ஹரூன் சைபி என போலீசாருக்கு அடையாளம் தெரியவந்ததை அடுத்து உடனே போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட சைபி போலீசிடம் இருந்து தப்பிக்க தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, போலீசாரை நோக்கி சுட ஆரம்பித்தார். தற்காப்புக்காக போலீசாரும் துப்பாக்கியால் சுட்டு சைபியை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து ஒரு சிறிய ரக கைத்துப்பாக்கி, மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலிசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சைபியை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.