தேசிய செய்திகள்

குடியரசு தலைவரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு; நாடு திரும்பினார்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து இன்று காலை நாடு திரும்பினார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது மனைவி சவிதா கோவிந்துடன் 5 நாள் சுற்றுப்பயணமாக பிலிப்பைன்ஸ் சென்றார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு ஜப்பான் சென்றார்.

19 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானுக்கு வந்த முதல் இந்திய ஜனாதிபதி என்ற முறையில் அங்கு அவருக்கு மிக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மன்னர் நருகிடோவின் முடிசூட்டு விழாவில் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து ஜப்பானுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று பூடான் மன்னர் ஜிக்மி கேசர் நாம்கியி வாங்சக்கை சந்தித்து பேசினார். இரு நாட்டு தலைவர்களும் ஜப்பான் அரசர் நருகிடோ பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து காண்டனர்.

இதனிடையே, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது 7 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து இன்று காலை ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டு இன்று காலை இந்தியாவுக்கு திரும்பினார்.

SCROLL FOR NEXT