இந்திய தபால் துறை 1854 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் அஞ்சல் சேவை மற்றும் பார்சல் டெலிவரி சேவைகளில் தபால் துறை ஈடுபட்டு வருகிறது. உலகின் மிகப் பழமையான தபால் துறைகளில் ஒன்றாக உள்ள இந்திய தபால் துறை நவீன காலத்திற்கு ஏற்ப பல்வேறு புதுமைகளையும் அறிமுகப்பபடுத்தி வருகிறது.
விரைவு தபால் சேவை, போஸ்ட் பேமெண்ட் வங்கி, அஞ்சலக சேமிப்பு திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வரும் தபால் துறை தற்போது புதிய முயற்சியாக 24 மணி நேரத்தில் டெலிவரி செய்யக்கூடிய அதிவிரைவு தபால் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, முக்கியத்துவம் வாய்ந்த தபால்களை இந்த சேவையின் மூலம் அடுத்த நாளே அனுப்பலாம். இந்த சேவை இன்று முதல் அறிமுகம் ஆக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த கடிதப் பரிமாற்றங்களை இதன் மூலம் அனுப்ப முடியும். முக்கியமான அரசு சம்பந்தமான தொடர்பு கடிதங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த சேவை பெரும் பயனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக இந்த சேவை டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும். படிப்படியாக பிற இடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது. தனியார் கூரியர் சேவை நிறுவனங்களுக்கு போட்டியாக அஞ்சல் துறையின் இந்த திட்டம் அமைந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல 48 மணி நேரத்தில் டெலிவரி செய்யக்கூடிய பிரீமியம் டெலிவரி சேவையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.