திருப்பதி,
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பக்தர் பிரேம் கோண்டு. இவர் அரிய வகையான கங்கராஜ் இனத்தைச் சேர்ந்த காளையை வளர்த்து வருகிறார். மிகப்பெரிய கொம்புகளைக் கொண்ட அந்த காளையுடன் பல நாட்களாக நடைபயணம் மேற்கொண்டு திருப்பதியை நோக்கி வருகிறார்.
தற்போது அவர் சூரியாபேட்டையை வந்தடைந்துள்ளார். இன்று அல்லது நாளை அவர் திருப்பதியை அடைய உள்ளார் .அந்த காளயின் பெரிய கொம்புகளும் வலிமையான தோற்றமும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த யாத்திரை குறித்து பிரேம் கோண்டு கூறுகையில், "எங்களது குடும்பத்தினர் கடந்த 150 ஆண்டுகளாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கராஜ் காளையுடன் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். முன்னோர்கள் கடைப்பிடித்த இந்த மரபை நானும் பின்பற்றி வருகிறேன்.
எந்த புனிதத் தலத்திற்குச் சென்றாலும், இந்த காளையை நந்தீஸ்வரரின் உருவமாக கருதி அழைத்துச் செல்வோம். இதன் மூலம் கைலாசநாதரின் அருள் கிடைக்கும் என்பது தங்களது நம்பிக்கை. முதலில் ஸ்ரீசைலம் சென்று மல்லிகார்ஜுன சுவாமியை தரிசித்த நாங்கள் பின்னர் திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க உள்ளோம்" என்றார்.