தேசிய செய்திகள்

பயணிகள் கொரோனா நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்- விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவு

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு பொது இடங்களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் பயணிகள் விமானங்களுக்குள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுவதை விமான நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி விமான பயணிகள் பயணம் முழுவதும் முக கவசங்களை அணிதல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பயணிகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக விமான நிறுவனங்களால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது. இந்தியாவில் இன்று புதிதாக 9,062 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT