புதுடெல்லி,
டெல்லியில் இருந்து பெங்களூருக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் இறக்கை திடீரென்று தீப்பிடித்ததால், டெல்லி விமான நிலையத்திலேயே விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தின் என்ஜினில் ஒரு பகுதி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உடனடியாக தரையிறக்கம் செய்யப்பட்டு, 177 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விமானத்தின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.