தேசிய செய்திகள்

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பதில்

இளைஞர்களின் நலனை விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

புதுடெல்லி,

'நீட்' முறைகேடு தொடர்பாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து 'நீட்' விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: "நமது இளைஞர்களின் நலனையும், அவர்களின் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவு சம்பவங்களில் தொடர்புடையவர்களுக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை வழங்கும் வகையில், விரைவு நீதிமன்றங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். மாணவர்களின் நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நமது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் உறுதிக்கு பதில் அளித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வெளியிட்டுள்ள பதிவில், “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளனர்.