ராஜஸ்தான் 
தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: குளத்தில் மூழ்கி தத்தளித்த சகோதரர்; காப்பாற்ற சென்ற 3 சகோதரிகளும் உயிரிழந்த சோகம்

கிராமவாசிகளின் உதவியோடு சில மணி நேரத்திலேயே மனோரமா, போட்டோ மற்றும் நிஷா ஆகிய மூன்று பெண்களின் உடல்களும் குளத்திலிருந்து மீட்கப்பட்டன.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் தோல்ப்பூர் மாவட்டத்தில் புனித நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரக்‌ஷா பந்தன்

ராஜஸ்தான் மாநிலம் தோல்ப்பூர் மாவட்டம் நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ரவி குமார் (21), அவரது சகோதரிகள் மனோரமா (22), போட்டோ (25) மற்றும் அவர்களின் உறவினர் பெண் நிஷா (18) ஆகிய 4 பேரும் பிர்ஜா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹிராமன் பாபா கோவிலுக்கு சென்றிருந்தனர். ரக்ஷா பந்தனை முன்னிட்டு சனிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 29) நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருவிழா நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

குளத்தில் மூழ்கி பலி

நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் கோவில் வளாகத்தை ஒட்டியுள்ள ஹிராமன் பாபா குளத்தில் பக்தர்கள் நீராடத் தொடங்கினர். அப்போது ரவி குமார் எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கத் தொடங்கினார். கரை ஓரத்தில் நீராடிக்கொண்டிருந்த அவரது சகோதரிகளும் உறவினரும் ரவி தவிப்பதைக் கண்டு, அவரைக் காப்பாற்ற உடனடியாக ஆழமான பகுதிக்குக் குதித்தனர். ஆனால், நீரின் ஆழம் மற்றும் வேகம் காரணமாக 4 பேராலும் கரை திரும்ப முடியாமல் நீரில் மூழ்கினர்.

சம்பவ இடத்திலிருந்த பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் உடனடியாக மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர். அங்காய் காவல் நிலைய அதிகாரி கிருபால் சிங் தலைமையிலான காவல் துறையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கிராமவாசிகளின் உதவியோடு சில மணி நேரத்திலேயே மனோரமா, போட்டோ மற்றும் நிஷா ஆகிய மூன்று பெண்களின் உடல்களும் குளத்திலிருந்து மீட்கப்பட்டன.

நீரில் மூழ்கி தவித்த மேலும் நான்கு பக்தர்கள்

நீரில் மூழ்கிய ரவி குமாரின் உடலை மீட்க சுமார் 6 மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது. இதேபோல நீரில் மூழ்கி தவித்த மேலும் நான்கு பக்தர்களை கிராம மக்கள் சமயோசிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட நான்கு பேரின் உடல்களும் உடனடியாக சர்மாத்துரா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்குப் பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பண்டிகை நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உயிர்கள் பறிபோனது நாதூவாபுரா கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

SCROLL FOR NEXT