தேசிய செய்திகள்

சமோசா வாங்குவதற்காக ரெயிலை நிறுத்தினாரா ஓட்டுநர்? - வைரலாக பரவிய வீடியோ குறித்து ரெயில்வே நிர்வாகம் விளக்கம்

உணவு வாங்குவதற்காக ரெயில் நிறுத்தப்பட்டதாக சித்தரிப்பது முற்றிலும் தவறானது என மேற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தூர்,

மராட்டிய மாநிலம் இந்தூரில் உள்ள ரஸ்கஸ்வரா சாலை அருகே, தண்டவாளத்தில் ரெயிலை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநர் கீழே இறங்கி அருகே உள்ள கடையில் சமோசா வாங்கிச் செல்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பார்த்து பலர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். தனிப்பட்ட காரணங்களுக்காக இப்படி ரெயிலை நிறுத்தி பயணிகளின் நேரத்தை வீணடிப்பதா? என்றும், இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கருத்துகளை பதிவிட்டனர்.

இந்நிலையில், வைரலாக பரவிய அந்த வீடியோ குறித்து மேற்கு ரெயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக மேற்கு ரெயில்வே நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“ரெயில் ஓட்டுநர் தனது சொந்த வேலைக்காக ரெயிலை நிறுத்தியதாக பரவி வரும் தகவல் தவறானது. இது மக்களை தவறாக வழிநடத்துகிறது.

27237 மற்றும் 27600 ஆகிய இன்ஜின் எண்களைக் கொண்ட சரக்கு ரெயில் (Concor Green Field Private Terminus), RAU யார்டில் (yard) நடைபெற இருந்த பராமரிப்பு பணிகளுக்காக ஏற்கனவே RAU ஹோம் சிக்னலில் (Home Signal) நிறுத்தப்பட்டிருந்தது. உணவு வாங்குவதற்காக அந்த ரெயில் நிறுத்தப்படவில்லை.

இவ்வாறு செயல்பாட்டு ரீதியாக ரெயில் நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​உதவி லோகோ பைலட் (ALP) ஒருவர் உணவு வாங்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது. அனுமதிக்கப்பட்ட அந்த நிறுத்தத்தின்போது நடந்த ஒரு தனிப்பட்ட செயலை, சிற்றுண்டி அல்லது உணவுக்காகவே ரெயில் நிறுத்தப்பட்டதாக சித்தரிப்பது முற்றிலும் தவறானதாகும்.

மேலும், இந்த வீடியோவில் இருப்பது ஒரு பயணிகள் DEMU ரெயில் என்று தவறாக கூறப்பட்டுள்ளது. உண்மையில் இந்த சம்பவம் ஒரு சரக்கு ரெயிலுடன் தொடர்புடையது. இத்தகைய தேவையற்ற சித்தரிப்புகள் தவறான தகவல்களை உருவாக்குவதோடு, பொதுமக்களின் நம்பிக்கையையும் சிதைக்கின்றன.

தவறான தகவல்களைப் பரப்பும் அல்லது திசைதிருப்பும் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கு முன் உண்மைகளைச் சரிபார்க்கவும். தவறான தகவல்களை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும், தகவல்களைப் பகிர்வதற்கு முன் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் உண்மைகளைச் சரிபார்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.