புதுடெல்லி,
டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் பலனடைந்தவர்களிடம் நமோ ஆப் மூலம் மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
டிஜிட்டல் இந்தியாவை மிக எளிமையானதாக மாற்றி வருகிறோம், டிஜிட்டல் முறையால் கிராமப்புறங்கள் பயனடைய வேண்டும் என்பதே முக்கிய நோக்கம். தொழில்நுட்பத்தின் பலன்கள் அதிகளவு கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தொடங்கினோம்.
தொழில்நுட்பத்தால், ரயில் டிக்கெட்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்கிறோம். கட்டணங்களை இணைய தளம் மூலம் சென்று செலுத்த முடிகிறது. டிஜிட்டல் முறையால் ஒரு சிலர் மட்டும் நன்மை பெறாமல், அனைவரும் பயனடைவதை உறுதி செய்தோம்.
நாடு முழுவதும் மூன்று லட்சம் பொது சேவை மையங்கள் இயங்கி வருகிறது. முதியவர்கள் பென்ஷன் தொடர்பான சேவையை பெற அவர்களுக்கும் தொழில்நுட்ப பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மூன்று லட்சம் பொது சேவை மையங்களின் வாயிலாக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ரூபே கார்டு பயன்படுத்துவது ஒரு வகையான தேசிய சேவையாகும். 50 கோடிக்கும் மேற்பட்ட ரூபே அட்டைகளை கடந்த 4 ஆண்டுகளுக்குள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கணினி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயனைடையும் பயனாளிகளுடன் பிரதமர் மோடி அவ்வப்போது காணொலி மூலம் உரையாடி வருவது குறிப்பிடத்தக்கது.