தேசிய செய்திகள்

உணவு சமைப்பதில் ஏற்பட்ட தகராறு; மதுபோதையில் மனைவியை கொன்ற கணவன் கைது

சம்பவத்தன்று தனது மனைவி அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டார் என்று போலீசாரிடம் தினேஷ் கூறியிருந்தார்.

சண்டிகர்,

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தினேஷ் என்பவர், அரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் உள்ள பாத்ஷாபூர் பகுதியில் தனது மனைவி தல்மாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 16-ந்தேதி தினேஷ் காவல்துறையை தொடர்பு கொண்டு, தனது மனைவி சுயநினைவை இழந்துவிட்டதாக தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தல்மாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தல்மா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசாரிடம் தினேஷ் அளித்த வாக்குமூலத்தில், தானும் தனது மனைவியும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம் என்றும், அன்றைய தினம் தனது மனைவி அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டார் என்றும் கூறியிருந்தார்.

இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருந்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், தல்மா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தினேஷை பிடித்து விசாரித்தபோது, அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

சம்பவத்தன்று, தான் மதுபோதையில் இருந்ததாகவும், இரவு உணவு சமைப்பது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்து அவரை கொலை செய்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் தினேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT