தேசிய செய்திகள்

விவாகரத்து வழக்கு; கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தனியுரிமை கோர முடியாது - சுப்ரீம் கோர்ட்டு

தனியுரிமை என்பது முழுமையானது அல்ல, அது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என டெல்லி ஐகோர்ட்டு கோர்ட்டு தெரிவித்திருந்தது.

புதுடெல்லி,

விவாகரத்து வழக்கில் கள்ளத்தொடர்பை நிரூபிக்க ஆதாரங்கள் அவசியம் என்பதால், மனைவியின் கோரிக்கை, இந்து திருமண சட்டப்படி ஏற்புடையதுதான் என்றும், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கணவர் தனியுரிமை கோர முடியாது என்றும் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

விவாகரத்து மனு

டெல்லி குடும்பநல கோர்ட்டில் ஒரு பெண், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “எனது கணவருக்கும், மற்றொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருக்கிறது. அந்த உறவு மூலம் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. என் கணவரும், அந்த பெண்ணும் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

அவர்களின் கள்ளத்தொடர்பை நிரூபிக்க அந்த அறையின் முன்பதிவு விவரம், பணம் செலுத்திய விவரம் மற்றும் இருவரிடையிலான தொலைபேசி உரையாடல் விவரங்களை எனக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

குடும்பநல கோர்ட்டு

அந்த மனுவை விசாரித்த குடும்பநல கோர்ட்டு, அவர் கேட்ட விவரங்களை பாதுகாத்து, முத்திரையிட்ட உறையில் வைத்து கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது. மேலும், கணவரின் கள்ளத்தொடர்பை நிரூபிக்க கோர்ட்டை மனைவி நாடும்போது கோர்ட்டு உதவ வேண்டும் என்றும் தெரிவித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் கணவர் மேல்முறையீடு செய்தார். இந்த உத்தரவால் தனது தனியுரிமை பாதிக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.

தனியுரிமை கோர முடியாது

ஆனால் அவரது மேல்முறையீட்டை நிராகரித்த டெல்லி ஐகோர்ட்டு, கடந்த 2023-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், “இந்து திருமண சட்டம், கள்ளத்தொடர்பை விவாகரத்துக்கு அடிப்படை காரணமாக கூறுகிறது. தனியுரிமை என்ற பெயரில், கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ஆணுக்கு உதவ கோர்ட்டு முன்வருவது பொதுநலனுக்கு உகந்தது அல்ல.

தனியுரிமை என்பது அரசியலமைப்பு சட்டப்படி பாதுகாக்கப்பட்ட உரிமைதான். ஆனால் அது முழுமையானது அல்ல. அது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அவர் தனியுரிமை கோர முடியாது. அவரது கள்ளத்தொடர்பை நிரூபிக்க அந்த ஆதாரங்கள் அவசியம். மனைவியின் கோரிக்கை, இந்து திருமண சட்டப்படி ஏற்புடையதுதான்” என்று கூறியது.

சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து கணவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு நீதிபதிகள் மன்மோகன், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை உறுதி செய்ததோடு, ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தனர்.