புதுடெல்லி
மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 5 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். டெல்லி பயணத்தின் தொடக்கமாக அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.
பின்னர் மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தியை நேற்று சந்தித்தார்.
சோனியா காந்தியுடனான மம்தா பானர்ஜியின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பெகாசஸ் விவகாரம், 2024 நாடாளுமன்றத் தேர்தல், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது ஆகியன குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தி.மு.க. எம்.பி. கனிமொழியை மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேசினார். மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் டெல்லி வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதுகுறித்து கனி மொழி எம்.பி. தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்துப்பேசியது மகிழ்வளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.
மத்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதின் அவசியம் குறித்தும் உரையாடினோம் என கூறி உள்ளார்.