புனே,
இந்தியாவில் கொரோனா வைரசால் 1,071 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாட்டிலேயே, மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
நாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா மற்றும் மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது தொழில் முடங்கிப்போன நிலையில், வருவாய் வரும் வழி தடைப்பட்டு உள்ளது. போக்குவரத்தும் இன்றி, சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவையும் மீறி சில மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். ஒரே நேரத்தில் ஏராளமானோர் செல்வதால் அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த சூழலில், மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மும்பையை விட்டு வெளியேற கூடாது. அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் புகலிடம் ஆகியவற்றுக்கு போதிய ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம்.
மராட்டியத்தில் இருந்து செல்ல வேண்டிய தேவை இல்லை. அவர்கள் இங்கேயே தங்க வேண்டும் என கூறினார்.
நாளை ஏப்ரல் 1ந்தேதி, முட்டாள்கள் தினம். இந்த சூழ்நிலையில், வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என ஒவ்வொருவரிடமும் நான் கேட்டு கொள்கிறேன். வதந்தி பரப்பும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.