தேசிய செய்திகள்

கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

கடன் தள்ளுபடி பெற்றுத் தருவதாகக் கூறும் நபர்களையோ அல்லது அங்கீகரிக்கப்படாத அமைப்புகளையோ தொடர்பு கொள்ள வேண்டாம்.

கடன் தள்ளுபடி செய்வதாக கூறி பொதுமக்களை ஏமாற்றும் தவறான பிரசாரங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்று கூறி மோசடி அமைப்புகள் மக்களை நம்ப வைக்கின்றன.

கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி, அங்கீகாரம் இல்லாத கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கி கட்டணம் வசூலிக்கின்றனர். சேவை கட்டணம் அல்லது சட்டக் கட்டணம் என்ற பெயரில் கடன் வாங்கியவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கின்றனர். கடன் தள்ளுபடி பெற்றுத் தருவதாகக் கூறும் நபர்களையோ அல்லது அங்கீகரிக்கப்படாத அமைப்புகளையோ தொடர்பு கொள்ள வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.