ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம் உதய்ப்பூர்வாதி பகுதியை சேர்ந்தவர் சந்தீப் குமார் (வயது 37). டாக்டரான இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள அதர்ஷ் நகரில் வசித்து வந்தார்.
இந்நிலையில், டாக்டர் சந்தீப் குமார் நேற்று காலை மருத்துவமனையில் இருந்து காரில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் வாசலில் காரை நிறுத்திய சந்தீப் குமார் காரை விட்டு கிழே இறங்கவில்லை. அவர் காருக்குள்ளேயே இருந்துள்ளார்.
கார் வெகுநேரமாக வீட்டிற்கு வெளியே இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காரின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது, காருக்குள் டாக்டர் சந்தீப் குமார் சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், டாக்டர் சந்தீப் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதானைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தீப் குமார் உயிரிழந்தது எப்படி? அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.