தேசிய செய்திகள்

எத்தனால் பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களுக்கு சேதமா- மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி

சமூக வலைதளங்களில் இந்த குறைபாடுகள் பற்றி பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகிறது.

புதுடெல்லி,

டி.ஆர்.பாலு எம்.பி. மக்களவையில் 20 சதவீத எத்தனால் பெட்ரோல் பற்றி சில கேள்விகளை கேட்டு இருந்தார். அந்த பெட்ரோலால் வாகனங்கள் சேதம் அடைகின்றனவா? என்றும் கேட்டிருந்தார். இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்த தகவல் படி 20 சதவீத எத்தனால்-பெட்ரோல் பயன்பாடு காரணமாக வாகனங்களுக்கு பெரிய சேதங்கள் ஏற்படவில்லை. ஆனால், கார் என்ஜின் செயல்பாடு, மைலேஜ் குறைவு, தேய்மானம் போன்ற அம்சங்களில் ஏற்பட்ட சில குறைகள் மற்றும் தொந்தரவு தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. சமூக வலைதளங்களில் இந்த குறைபாடுகள் பற்றி பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகிறது.

ஆல்கஹால்-பெட்ரோல் கலவைத்திட்டம் பெட்ரோலிய அமைச்சகத்தால் பலகட்ட களஆய்வுகள், அறிவியல் சோதனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான ஆலோசனைகளுக்குப் பிறகே அறிமுகமாகிறது. இது படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.

இவ்வாறு பதிலில் கூறப்பட்டு உள்ளது.