புதுடெல்லி,
தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரத்தின் அடிப்படையில், வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள், அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம்(ஏ.டி.ஆர்.) என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25ல் மாநில அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை ஏ.டி.ஆர். வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
“கடந்த 2023-24ல் மாநில அரசியல் கட்சிகள் 347.69 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றன. இது, 2024-25ல் ரூ.1,051.56 கோடியாக(சுமார் 3 மடங்கு) உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக தி.மு.க. ரூ.365.78 கோடி நன்கொடையாக பெற்று முதலிடத்தில் உள்ளது. அடையாளம் தெரியாத நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ.300.64 கோடியை தி.மு.க. பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி ரூ.184.96 கோடியை நன்கொடையாக பெற்று இரண்டாவது இடத்திலும், ஆந்திராவை சேர்ந்த ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி ரூ.140.04 கோடியை நன்கொடையாக பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.