ஜெய்பூர்,
நாட்டில் பசு பாதுகாவலர்கள் என தங்களை கூறி கொள்பவர்கள் மாடுகளை ஏற்றி செல்பவர்களை கொடூரமாக தாக்கும் சம்பவமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பர்மெரில் கழுதையை ஏற்றி சென்றவர்களை பசு பாதுகாவலர்கள் தாக்கிய சம்பவம் நடந்து உள்ளது.
ஜாலோர் மாவட்டம் சைலா நகரை சேர்ந்த காந்திலால் பகீல் என்பவர் தன்னுடைய கழுதையை காணவில்லை என செப்டம்பர் 2-ம் தேதி போலீசில் புகார் கொடுத்து உள்ளார். பின்னர் அவரும் தன்னுடைய கழுதையை வலைவீசி தேடிவந்து உள்ளார். அப்போது கலூதி என்ற இடத்தில் கழுதையை கண்டுபிடித்து உள்ளார். உடனடியாக போலீசிடம் தகவல் தெரிவித்துவிட்டு நண்பர்களுடன் எஸ்யுவியில் கழுதையை ஏற்றி சென்று உள்ளார். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பசு பாதுகாலவர்கள் அவர்களை காரில் பின்னால் துரத்தி உள்ளனர்.
குறிப்பிட்ட தூரம் சென்றதும், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை மறித்து உள்ளனர். கழுதையை ஏற்றிச் சென்றவர்களை தாக்கிஉள்ளனர். பின்னர் காருக்குள் பார்த்து உள்ளனர். அங்கு கழுதை நின்றதை பார்த்து பசு பாதுகாவலர்கள் அவமானம் அடைந்தனர் அங்கிருந்து ஓடிவிட்டனர். உடனடியாக காந்திலால் காவல்நிலையம் சென்று புகார் கொடுத்தார். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான பசு பாதுகாவலர்களை தேடிவருகிறார்கள்.