கொல்கத்தா
மேற்கு வங்காளத்தில் சர்வதேச சந்தல் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். எனினும், அவரை வரவேற்க ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேரில் செல்லவில்லை என கூறப்படுகிறது.
அவருடைய அரசிலுள்ள வேறு மந்திரிகளும் கூட ஜனாதிபதியை வரவேற்பதற்காக நேரில் செல்லவில்லை. இதேபோன்று மாநாடு நடைபெறும் இடமும் வேறிடத்திற்கு மாற்றப்பட்டது. முதலில் நடைபெற இருந்த பிதான் நகர் பகுதியில் இருந்து கொசாய்பூருக்கு மாநாடு மாற்றப்பட்டது. அதில் குறைவான அளவுக்கே பார்வையாளர்கள் வந்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பழங்குடியினரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக விசயங்களை செய்துள்ளது. ஆனால், இந்த பகுதியில் வளர்ச்சி உங்களை வந்தடைந்ததா? அதுபோன்று எதுவும் எனக்கு தெரியவில்லை என்றார்.
இந்த மாநாட்டுக்கு வரவே சிலர் தடுத்து நிறுத்தப்பட்டனர் என நான் நினைக்கிறேன். சந்தல் பழங்குடியினர் ஒற்றுமையாக இருக்க சிலர் விரும்பவில்லை போலும் என பேசினார். இதன்பின்னர் அவர், மாநாட்டுக்கான இடம் ஏன் மாற்றப்பட்டது என எனக்கு தெரியவில்லை. நானும் வங்காள பெண்தான். மம்தா என்னுடைய இளைய சகோதரி போன்றவர்.
ஆனால், அவர் ஏன் மனவருத்தத்தில் இருக்கிறார் என தெரியவில்லை என பேசினார். இதனை குறிப்பிட்டும், முர்முவின் சில வீடியோக்களை வெளியிட்டும் பேசிய பிரதமர் மோடி, இது வெட்கக்கேடானது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது என்றும் கூறி ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.
இந்நிலையில், எஸ்.ஐ.ஆர். பணியின்போது வாக்காளர்கள் நீக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகளை கூறி மம்தா பானர்ஜி இன்று 2-வது நாளாக மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார்.
அவர் பேசும்போது, பழங்குடியினருக்கு எதிராக வன்முறைகள் நடந்தபோது நீங்கள் ஏன் போராடவில்லை? மத்திய பிரதேசத்தில் அல்லது சத்தீஷ்காரில் அது நடந்தபோது ஏன் நீங்கள் போராடவில்லை? முதலில் அவர்களுக்கு ஏதேனும் சில விசயங்களை செய்யுங்கள். அதன்பின்பு ஏதேனும் பேசுங்கள். பா.ஜ.க. அறிவுரையை கேட்டு தேர்தல் நேரத்தில் அரசியல் விளையாட்டை ஆட வேண்டாம் என கூறினார்.