மும்பை,
மராட்டியத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் குதிரை பேரத்தில் சிக்கிவிடாமல் இருக்க சிவசேனா தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை மும்பை மலாடு பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கவைத்து உள்ளது. இந்தநிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மாலை ஓட்டலில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதால் நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம். மராட்டியத்தில் சிவசேனா நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என கூறினார்.
அப்போது ஆதித்ய தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு குறித்து ஓட்டலில் தங்கியுள்ள சிவசேனா எம்.எல்.ஏ. ஒருவா கூறுகையில், பாரதீய ஜனதா நமக்கு முதல்-மந்திரி பதவியில் பங்கு தருவதாக கூறினால் அவர்களிடமும் பேசலாம். இப்போது உள்ள நிலையில் நம்மை யார் முதலில் தொடர்பு கொள்கிறார்கள் என்பதில் தான் உள்ளது. ஒருவேளை இருதரப்பினரும் (பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ்) முதல்-மந்திரி பதவியில் பங்கு தருவதாக கூறினால், நமது முதல் தேர்வு பாரதீய ஜனதாவாக தான் இருக்கும் என உத்தவ் தாக்கரே எங்களிடம் கூறினார் என்றார்.