தேசிய செய்திகள்

அக்டோபர் 25-ந் தேதி முதல்.. துபாய்-டெல்லி இடையே இரண்டடுக்கு தளம் கொண்ட விமான சேவை

இந்த விமான சேவை, இந்தியாவின் மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

துபாய்,

எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் துணைத்தலைவரும், தலைமை வர்த்தக அதி காரியுமான அத்னான் காசிம் கூறியதாவது:-

துபாயில் இருந்து இந்தியாவின் மும்பை, சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், கொல்கத்தா, கொச்சி, ஆமதாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு எமிரேட்ஸ் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இரண்டடுக்கு தளம்

இதில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். தொடர்ந்து அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இரண்டடுக்கு தளம் கொண்ட ஏ380 ரக விமான சேவையானது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விமான சேவையானது இந்தியாவின் மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

அக்டோபர் 25-ந் தேதி முதல்

இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு முதல் முறையாக இந்த இரண்டடுக்கு தளம் கொண்ட ஏ-380 ரக விமான சேவையானது வருகிற அக்டோபர் 25-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த சேவையை பெறும் 3-வது இந்திய நகரம் என்ற பெருமையை டெல்லி பெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.