லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டம் கவாலி கிராமத்தை சேர்ந்தவர் ராம்ஜி. இவருக்கு திருமணமாகி மனைவி,4 வயதில் விகாஸ் என்ற மகன் இருந்தார்.
இதனிடையே, மதுபோதைக்கு அடிமையான ராம்ஜி அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், ராம்ஜி நேற்று மீண்டும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவிக்கு, ராம்ஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராம்ஜி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மகன் விகாசை தரையில் வீசி அடித்துள்ளார். இதில், படுகாயமடைந்த சிறுவன் விகாசை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான ராம்ஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.