திஸ்பூர்,
அசாமின் கச்சார் மாவட்டத்தில் இன்று காலை சுமார் 9:21 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர்.இதையடுத்து சில மணி நேரங்களுக்குள், சில்சார் மற்றும் சுற்றுப்பகுதிகளை சக்திவாய்ந்த புயல் தாக்கியது. பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்து, மின்கம்பிகள் முறிந்து, பல இடங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்பட்டது.
மாலுகிராம், தாராபூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. விழுந்த மரங்கள் சாலைகளை மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிலநடுக்கத்திலிருந்து மீளாத நிலையில் புயல் தாக்கியதால் மக்கள் அச்சம் அதிகரித்துள்ளது. மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முழுமையான இயல்பு நிலை திரும்ப சில காலம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அசாமில் இன்று காலை 8.13 மணியளவில் ரிக்டர் 2.9 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.