மும்பை,
மராட்டிய மாநிலம், ஹிங்கோலி மாவட்டத்தில் நேற்று காலை 11.26 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திடீரென வீடுகள் மற்றும் பொருட்கள் குலுங்கியதால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஹிங்கோலி, பர்பானி மற்றும் நாந்தெட் ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதாவது கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 1.37 மணி முதல் அதிகாலை 3.23 மணி வரை ரிக்டர் அளவுகோலில் 3.6 முதல் 4.6 வரை அடுத்தடுத்து 4 முறை சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் பதிவாகின. இதில் பல வீடுகள் இடிந்து சேதமடைந்திருந்தன.
இந்தநிலையில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.