தேசிய செய்திகள்

மத்திய பிரதேச மாநிலத்தில் ஹர்திக் பட்டேல் கார் மீது முட்டை வீச்சு

மத்திய பிரதேச மாநிலத்தில் ஹர்திக் பட்டேல் கார் மீது முட்டை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜபல்பூர்,

குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையினராக உள்ள பட்டேல் இனத்தவரை ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதற்கான போராட்டத்தை கையில் எடுத்து நடத்தியவர் ஹர்திக் பட்டேல் (வயது 25).

இவர் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில், பனகர் என்ற இடத்தில் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க காரில் சென்று கொண்டு இருந்தார். அங்கு ரானிடால் பகுதியில் பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் அருகே அவரது கார் சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளையும், காலணிகளையும் வீசினர்.

இந்த தகவலை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் யாதவ் தெரிவித்தார்.ஹர்திக் பட்டேல் கார் மீது முட்டைகளையும், காலணிகளையும் வீசிய நபர்களில் சிலர் கைகளில் துப்பாக்கிகளும் இருந்ததாக சஞ்சய் யாதவ் கூறினார்.இந்த சம்பவத்துக்கு அந்த மாநில முதல்மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் ஆதரவாளர்கள்தான் காரணம் என ஹர்திக் பட்டேல் குற்றம் சாட்டினார்.