பெரும்பாவூர்,
கோட்டயம் அருகே உள்ள குறிஞ்சி பகுதியை சேர்ந்தவர் தங்கச்சன்(வயது 65). இடுக்கி மாவட்டம் குமாரமங்கலம் பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் தங்கச்சன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு இடுக்கி மாவட்ட விரைவு போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.
ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகாததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் தங்கச்சன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த இடுக்கி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.