ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் ராய்கட் மாவட்டம் கர்ஹொடா பகுதியில் பரந்து விரிந்த வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, மான் உள்பட பல்வேறு வன விலங்குகள், பறவைகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், கர்ஹொடா பகுதியில் சர்கொன் கிராமம் வழியாக ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த தண்டவாளத்தில் சரக்கு, பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
அந்த வகையில், சர்கொன் கிராமம் அருகே வனப்பகுதி வழியாக நேற்று இரவு 10 மணியளவில் சரக்கு ரெயில் வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரெயில் தண்டவாளத்தை வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் கூட்டம் கடக்க முயன்றது. அப்போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை மீது சரக்கு ரெயில் மோதியது. இந்த சம்பவத்தில் 40 வயதான காட்டு யானை படுகாயமடைந்தது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று ரெயில் மோதி காயமடைந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி காட்டு யானை இன்று காலை உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.