தேசிய செய்திகள்

சரக்கு, சேவை வரி குறைப்பு எதிரொலி: வீட்டு வசதி நிறுவனங்களுக்கு சலுகை

வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான வரி 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.

புதுடெல்லி,

கடந்த மாதம் 24ந் தேதி டெல்லியில் நடந்த 33வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இது ஏப்ரல் 1ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதை செயல்படுத்தும்விதம் பற்றி டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடந்த 34வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. அது வருமாறு:

* ஏப்ரல் 1ந் தேதிக்கு முன்னர் பதிவு செய்து கட்டுமானப்பணிகள் நடந்து வருகிற வீட்டு வசதி திட்டங்களுக்கு பழைய சரக்கு, சேவை வரியை தொடர்வது பற்றி முடிவு எடுப்பதற்கு வீட்டு வசதி நிறுவனங்களுக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும். இது வீட்டு வசதி நிறுவனங்களுக்கு சலுகையாக அமைகிறது.

* புதிய வீட்டு வசதி திட்டங்களை பொறுத்தமட்டில், குறைந்த விலை வீடுகளுக்கு உள்ளீட்டு வரி சலுகையின்றி 1 சதவீத வரி அமல்படுத்தப்படும். குறைந்த விலை வீடு என்பது ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானித்தபடி, மாநகரங்கள் தவிர்த்த நகரங்களில் 60 சதுர மீட்டர், மாநகரங்களில் 90 சதுர மீட்டர் பரப்பளவு இருக்கலாம். வீட்டின் விலை ரூ.45 லட்சம் வரை இருக்கலாம்.

* குறைந்த விலை வீடுகளை தவிர்த்து பிற வீடுகளுக்கு அவை ஏப்ரல் 1ந் தேதியோ, அதற்கு பின்னரோ பதிவு செய்து இருந்தால் அவற்றுக்கு உள்ளீட்டு வரி சலுகையின்றி 5 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும். ஏப்ரல் 1ந் தேதிக்கு பின்னர் தவணை செலுத்தக்கூடிய வீடுகளுக்கும் இது பொருந்தும்.

SCROLL FOR NEXT