தேசிய செய்திகள்

வறட்சியை சமாளிப்பது குறித்து விவாதிக்க அவசர அமைச்சரவைக் கூட்டம் - கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்

வறட்சியின் காரணமாக சில பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்வதாக தகவல் கிடைத்துள்ளது என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலையை சமாளிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, ஜூலை 19-ந்தேதி(நாளை) அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்டை மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு, காவிரி ஆற்று நீரைத் திறந்துவிடுமாறு வலியுறுத்தி வரும் நிலையில், அணைகளில் உள்ள நீர் தற்போதைக்குக் குடிநீர் தேவைக்காக மட்டுமே ஒதுக்கப்படும். பாசனத்திற்காக நீர் திறந்துவிடுவது நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இருப்பை பொறுத்தே அமையும்.

மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலையை சமாளிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக நாளை(19-ந்தேதி) அவசர அமைச்சரவை கூட்டத்தை நடத்த உள்ளேன். இக்கூட்டத்தை வியாழக்கிழமையே நடத்தத் திட்டமிட்டிருந்தோம்; ஆனால், நான் டெல்லிக்குச் சென்றிருந்ததால் அதை நடத்த முடியவில்லை.

வறட்சி நிலைமை குறித்து விவாதிக்கப்பட வேண்டும். மேலும் நாளை காலை அனைத்து மாவட்டங்களின் துணை ஆணையர்கள், ஜில்லா பஞ்சாயத்து தலைமைச் செயல் அதிகாரிகள் (CEOs) மற்றும் பிற அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஒரு கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் பேசப்படும் விஷயங்கள் குறித்து நாளை பிற்பகலில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

தற்போதைய நிலைமை மற்றும் வறட்சியின்போது செயல்படுத்தக்கூடிய திட்டங்கள, நடவடிக்கைகள் குறித்த விவரங்களை நாங்கள் பெற்றுள்ளோம். வறட்சியின் காரணமாக சில பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. தற்போதைய நிலைமை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து, அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.