டெல்லி,
தென்கிழக்கு டெல்லியின் ஓக்லா-1 பகுதியில் தனியார் நிறுவனத்தின் குடோனில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஊழியர் ஒருவர் பலியானார்.
தென்கிழக்கு டெல்லியின் ஓக்லா-1 பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று ஆஸ்பத்திரி உள்ளிட்ட தொழில்துறை பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் சிலிண்டர் குடோனை வைத்துள்ளது. இங்கு நேற்று வாகனத்தில் கொண்டு வரப்பட்ட சிலிண்டர்களை இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு சிலிண்டர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தது. பின்னர் பலத்த சத்தத்துடன் அது வெடித்து சிதறியது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 5 ஊழியர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.