புதுடெல்லி,
ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானியின் நிறுவனங்கள் எஸ் வங்கியிடம் இருந்து ரூ.12,800 கோடி கடனாக பணம் பெற்றுள்ளன என கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதற்கான வட்டி தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பாகவும், வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பி செலுத்துவதில் மோசடி தொடர்பாக அமலாக்க துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மும்பை மற்றும் டெல்லியை சேர்ந்த அமலாக்க துறை குழுவினர் மும்பைக்கு வந்திறங்கினர்.
அவர்கள் தொழிலதிபர் அனில் அம்பானியின் வீடு மற்றும் நிறுவனம் உள்பட பல்வேறு இடங்களில் இன்று சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். எனினும், இந்த சோதனை பற்றி அமலாக்க துறை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.