தேசிய செய்திகள்

வேறு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரம்... காதலியை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை

வைஷ்ணவி தனது வருங்கால கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு, சஹில் தன்னை தொந்தரவு செய்கிறான் என்று கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சஹில் லவ்ஹாரே. இவர் அமராவதி மாவட்டத்தை சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே, வைஷ்ணவிக்கு சமீபத்தில் வேறு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் சஹிலுக்கு தெரியவந்தபோது அவர் மிகவும் ஆத்திரமடைந்துள்ளார். இது குறித்து நேற்று இரவு நாசிக்கில் உள்ள வன்சம்பதா என்ற பகுதி அருகே வைஷ்ணவியை சந்தித்து சஹில் விவரம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், இளம்பெண் வைஷ்ணவி தனது வருங்கால கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு, சஹில் தன்னை தொந்தரவு செய்கிறான் என்று கூறியுள்ளார்.

அந்த போன் இணைப்பை துண்டிக்காமல், வைஷ்ணவி மற்றும் சஹில் இடையே நடந்த உரையாடல்களை கேட்டுக் கொண்டே சம்பவ இடத்திற்கு வைஷ்ணவின் வருங்கால கணவர் விரைந்து சென்று கொண்டிருந்தார். சுமார் 22 நிமிடங்களுக்கு பிறகு திடீரென உரையாடல் நின்றது. அப்போது போனை எடுத்து பேசிய சஹில், “வைஷ்ணவியை கொன்றுவிட்டேன்” என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் பயந்துபோன அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு வைஷ்ணவி கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் ஒரு மரத்தில் தூக்கில் தொடங்கிய நிலையில் சஹில் சடலமாக மீட்கப்பட்டார். வைஷ்ணவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு சஹில் தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.