அதாவது, பெரியவர்களுக்கு ரூ.100-ம், குழந்தைகளுக்கு ரூ.50-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மைசூரு அரண்மனை
கர்நாடக மாநிலம் மைசூருவில் உலக புகழ்பெற்ற மைசூரு அரண்மனை அமைந்துள்ளது. மைசூருவுக்கு சுற்றுலா வருபவர்கள் முதலில் அரண்மனைக்கு தான் சென்று சுற்றி பார்ப்பார்கள். மைசூரு அரண்மனையில் பழங்கால நினைவு சின்னங்கள், மன்னர் காலத்து பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வருபவர்கள் அதனை பார்த்து ரசித்து வருகிறார்கள்.மைசூரு அரண்மனைக்கு வருவதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதாவது அரண்மனைக்கு செல்ல பெரியவர்களுக்கு ரூ.70-ம், குழந்தைகளுக்கு ரூ.30-ம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அரண்மனை நுழைவு கட்டணத்தை அரண்மனை வாரியம் திடீரென்று உயர்த்தி உள்ளது.
இதுகுறித்து அரண்மனை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கட்டணம் உயர்வு
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு (2020) 4 மாதங்களும், இந்த ஆண்டு 4 மாதங்களும் மைசூரு அரண்மனைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரண்மனை மூடப்பட்டதால் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்காக அரண்மனை நுழைவு கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு ரூ.100-ம் (பழைய கட்டணம் ரூ.70), குழந்தைகள், சிறியவர்களுக்கு ரூ.50-ம் (பழைய கட்டணம் ரூ.30) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அரண்மனையில் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.மேலும் அரண்மனையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து உள்ளது.