தேசிய செய்திகள்

பி.எப். பணம் எடுக்க போகிறீர்களா..? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்..!

சேவைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதற்காக இந்த மாற்றம் செய்யப்படுவதாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு ​​தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உங்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கு இருந்தால், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

வருங்கால வைப்பு நிதி

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது இணையதளத்தில் சில நாட்களுக்கு ஒரு பெரிய தொழில்நுட்ப மேம்படுத்தலை மேற்கொள்கிறது. இந்தக் காலகட்டத்தில், புதிய பி.எப். கோரிக்கைகள், முன்பணக் கோரிக்கைகள் மற்றும் பல ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். எனவே, அவசரமாகப் பணத்தை எடுக்க வேண்டிய அல்லது முக்கியமான ஆவணங்களைக் கோர வேண்டிய உறுப்பினர்கள், இந்தச் செயல்முறையை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆன்லைன் சேவைகள்

இதன்படிதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின்(EPFO) இணையதளத்தில் மென்பொருள் மற்றும் தரவுத்தள மேம்படுத்தும் பணிகள் (System Migration) நடைபெறுவதால், இன்று முதல் (ஜூன் 26-ம்தேதி) ஜூன் 30-ம்தேதி வரை பி.எப். (PF) ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால சேவைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றுவதற்காக இந்த மாற்றம் செய்யப்படுவதாக EPFO ​​தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த மேம்படுத்தும் செயல்பாட்டின் போது உறுப்பினர்கள் சில தற்காலிக சிரமங்களை அனுபவிக்க நேரிடலாம். தொடர்ந்து ஒத்துழைக்குமாறு அந்த அமைப்பு உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

PF பணம்

இந்த மூன்று நாட்களுக்கு கோரிக்கைகள் சமர்ப்பித்தல் (Claim submissions) மற்றும் செயலாக்கம் (Processing) முழுமையாக நிறுத்தப்படும். இதனால் உறுப்பினர் தளம், முதலாளி தளம், UMANG செயலி, PF பணம் பெறும் விண்ணப்பம், ECR தாக்கல் மற்றும் e-Passbook போன்ற முக்கியச் சேவைகள் பாதிக்கப்படும். இந்த நாள்களில் அவசர உதவி தேவைப்படுவோர் EPFO அழைப்பு மைய எண்ணான 14470-ஐத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவை வழங்கலை மேம்படுத்தவும், செயலாக்கத் திறனை அதிகரிக்கவும், சிறந்த பயனர் அனுபவத்தை அளிக்கவும், கோரிக்கை செயலாக்க அமைப்பிற்கான தரவுத்தள ஒருங்கிணைப்பு மற்றும் மென்பொருள் பயன்பாடுகளின் மேம்படுத்தல் பணிகளை EPFO ​​மேற்கொண்டு வருகிறது என்று அந்தச் சட்டப்பூர்வ அமைப்பு தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

EPFO இணையதளம்

இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, EPFO வழங்கிய தகவலின்படி, இன்று (ஜூன் 26) நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 28-ம்தேதி இரவு 11:59 மணி வரை EPFO இணையதளம் வழியாகக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்தல் மற்றும் செயலாக்குதல் ஆகியவை தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.