தேசிய செய்திகள்

எத்தனால் பெட்ரோல் செயல்திறனை குத்துமதிப்பாக அளவிட முடியாது - நிதின் கட்காரி

பத்திரிகையாளர் ஒருவர் தனது வாகனம் 20 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோலால் ‘மைலேஜ்' குறைந்து விட்டதாக கூறினார்.

புதுடெல்லி,

மத்திய அரசு 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் ஊக்குவித்து வருகிறது. இந்த பெட்ரோலால் வாகனங்களின் 'மைலேஜ்' குறைவதாகவும், என்ஜின் பழுதுபடுவதாகவும் சில புகார்கள் எழுந்தன. இதனை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி மறுத்தார். ‘மைலேஜ்' குறையலாம். ஆனால் வாகனம் பழுதுபடாது என அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக ஒரு சர்ச்சை நீடித்துக்கொண்டே இருக்கிறது.

சோதனை கருவிகள்

இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் நிதின் கட்காரியிடம் பத்திரிகையாளர் ஒருவர் தனது வாகனம் 20 சதவீத எத்தனால் கலப்பு பெட்ரோலால் ‘மைலேஜ்' குறைந்து விட்டதாக கூறினார். 2023-ல் வாங்கப்பட்ட அந்த கார், முன்பு லிட்டருக்கு 11 கி.மீ. தந்ததாகவும், எத்தனால் பெட்ரோலால் 7 கி.மீ. ஆகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். இதை கணக்கிட்டது யார்? என மந்திரி நிதின் கட்காரி கேட்டார். அப்போது அந்த பத்திரிகையாளர் 'நானே கணக்கிட்டேன்' என்றார். இதனைக் கேட்ட நிதின் கட்காரி, "நீங்களாகவே மைலேஜை குத்துமதிப்பாக சரிபார்க்க முடியாது. உற்பத்தியாளரால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை கருவிகள் மூலமாக மட்டுமே துல்லியமான எரிபொருள் செயல்திறன் அளவீடுகளைப் பெற முடியும்" என்று கூறினார்.