தேசிய செய்திகள்

பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்துள்ளார்: பிரதமருக்கு கனிமொழி பதிலடி

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு பிறகு, மசோதாக்களை தாக்கல் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாக்களுக்கு ஆதரவாக 251 பேரும், எதிராக 185 பேரும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதனையடுத்து நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி சுமார் 40 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என்று கூறினார்.

தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கருப்பு நிற சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் கருப்புச்சட்டை அணிந்தே அவைக்கு சென்றனர். இதைபோல பெண் எம்.பி.க்கள் கருப்பு நிற சேலை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.

விவாதத்துக்கான நேரம் பற்றிய பேச்சு எழுந்தபோது, 12 மணி நேரம் ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ஓம் பிர்லா. "எல்லா உறுப்பினர்களுக்கும் பேச அனுமதி வழங்கப்படும். 15 முதல் 18 மணி நேரம் வரை விவாதம் நடத்தப்படும். விவாதத்துக்கு பிறகு நாளை (அதாவது இன்று) மாலை 4 மணிக்கு வாக்கெ டுப்பு நடைபெறும்" என்றார்.

திமுகவினரின் கருப்புச்சட்டை போராட்டத்தை பிரதமர் மோடி கிண்டல் செய்தார். அவர் பேசும்போது, திமுகவினரின் கருப்பு சட்டை போராட்டத்தை கண் திருஷ்டியை விரட்டும் 'கருப்புத்திலகம்' போல இருக்கிறது என்று கூறினார். “ஒரு நல்ல காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பு கருப்புத் திலகம்' இடும் பாரம்பரியம் உள்ளது. அதை செய்துள்ள தி.மு.க.வினருக்கு நன்றி தெரிவிக்கிறேன்" என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் கிண்டலுக்கு திமுக எம்.பி.கனிமொழி இன்று பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்துத்துவாவை பாதுகாப்பதாக சொல்லும் ஆளும் கட்சியினருக்கு கருப்பு தெய்வமான காளி நினைவில் இல்லை. கறுப்பு காளியை மறந்துவிட்டீர்களா?. பெண் சக்தியை பறைசாற்றும் பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான் அணிந்துள்ளார்.

அந்த காளிதான் ஒரு ஈகோ அராஜகம் போன்றவற்றை விரட்டும் தன்மை கொண்டவர். அத்தகைய கருப்பு வண்ணத்தை நாங்கள் தேர்வு செய்து எதிர்ப்பை பதிவு செய்கிறோம். ஏனென்றால் அது பெரியாரின் நிறம். சுயமரியாதை, கடைசிவரை போராடும் குணத்தை கற்றுக்கொடுத்தவர் பெரியார். நாங்கள் கடைசிவரை போராடுவோம்” என்று கூறினார்.