பாட்னா,
பீகாரில் முன்னாள் முதல்-மந்திரிகளுக்கு அரசு ஒதுக்கியுள்ள பங்களாக்களில், அவர்கள் தங்கள் ஆயுள் முழுதும் தங்கியிருக்கலாம் என்ற சட்டம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியை, பாட்னாவின் சர்குலர் சாலையில் உள்ள அரசு பங்களாவில் இருந்து காலி செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான நோட்டீஸ் சமீபத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில், லாலுபிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி, பாட்னாவில் சர்க்குலர் சாலையில் உள்ள அரசு பங்களாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். இதற்கிடையே, அந்த பங்களா, பீகார் பால்வளம் மற்றும் மீன்வளத்துறை மந்திரி நந்தகிஷோர் ராமுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் இருந்து பாட்னா திரும்பிய ராப்ரி தேவியிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூறியதாவது:-முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, எனது மந்திரிசபையில் மந்திரியாக இருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். அவர் உற்சாகமாக இருப்பதை பார்க்கிறேன். அவர் வலுக்கட்டாயமாக என்னை வெளியேற்றட்டும், பார்க்கலாம். நான் காலி செய்ய மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.