தேசிய செய்திகள்

பெங்களூருவில் வீட்டில் பதுக்கிய வெடிப்பொருட்கள் பறிமுதல்-3 பேர் கைது

பெங்களூருவில் வீட்டில் பதுக்கிய வெடிப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

சோழதேவனஹள்ளி:-

பெங்களூரு சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் வெடிமருந்துகள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் இருந்தன. இதுகுறித்து வீட்டில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் எசரகட்டாவை சேர்ந்த குமார் (வயது 21), சங்கர் (34) மற்றும் சீனப்பா (21) ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் கல்குவாரியில் பாறைகளுக்கு வைப்பதற்காக வெடிமருந்துகள் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ஜெலட்டின் குச்சிகள், பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT