புதுடெல்லி,
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் மொத்த ஏற்றுமதி 45.17 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.42 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதுவே, கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில், ஏற்றுமதி 1.67 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே நடைபெற்றிருந்தது. ஏற்றுமதியை போலவே இறக்குமதியும் கடந்த ஆகஸ்டில் அதிகரித்துள்ளது. இம்மாதத்தில் இறக்குமதி 51.47 சதவீதம் அதிகரித்து, 3.43 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், இறக்குமதி 2.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
அதே சமயம் ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 1.01 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், ஏற்றுமதி 66.92 சதவீதம் அதிகரித்து, 11.95 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.