புதுடெல்லி,
கொரோனா பெருந்தொற்றின் 2வது அலையை நாடு சந்தித்து வந்தபோதிலும், இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியானது நடப்பு நிதியாண்டில் 26.51 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது.
இந்தியாவில் உள்ள தானியங்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், மில் பொருட்கள் மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை மத்திய கிழக்கு நாடுகள், தொலைதூர கிழக்கு நாடுகள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு சந்தைகளில் தேவையாக உள்ளது.
இதனால், ஏப்ரல் முதல் பிப்ரவரி (2020-21) வரையிலான காலகட்டத்தில் நாட்டில் பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி, அதற்கு முந்தின ஆண்டின் இதேகாலகட்டத்துடன் ஒப்பிடும்பொழுது 26.51 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இதுபற்றி அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், ஏப்ரல் முதல் பிப்ரவரி 2021 வரையில் ஏற்றுமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.43,798 கோடியாக உள்ளது என தெரிவித்துள்ளது.
இதன்படி, தானியம் சார்ந்த பொருட்கள் (18 சதவீதம்), பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் சாறு வகைகள் (12 சதவீதம்) மற்றும் கடலை (7 சதவீதம்) ஆகியவற்றின் ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் எண்ணெய் உணவுகள் ஏற்றுமதி 96 சதவீதம் அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது.