தேசிய செய்திகள்

உறைபனியிலும் சீறிப்பாயும் ராணுவ வாகனங்கள்: புதிய டீசல் அறிமுகம்

சிறப்பு டீசல் மைனஸ் 42 டிகிரி செல்சியஸ் வரையிலான மிக கடுமையான உறைபனியிலும் துளிக்கூட உறையாது என்று ராணுவ தளபதி தெரிவித்தார்.

புதுடெல்லி,

மைனஸ் 42 டிகிரி செல்சியஸ் கடுங்குளிரிலும் உறைந்து போகாமல், ராணுவ வாகனங்களை ராக்கெட் வேகத்தில் இயங்க வைக்கும் அதிநவீன "எக்ஸ்ட்ரீம் வெதர் கிரேடு" (XWG) டீசலை ராணுவ தலைமை தளபதி ஜெனரல் தீரஜ் சேத் இன்று புதுடெல்லியில் முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த புதிய எரிபொருள், ராணுவத்தின் போர் ஆற்றலை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

உறைபனி சவாலுக்கு முற்றுப்புள்ளி

வழக்கமாக லடாக், சியாச்சின் போன்ற இமயமலையின் மிக உயரமான மற்றும் பனிப்பொழிவு மிகுந்த பகுதிகளில் சாதாரண டீசல் உறைந்து போய்விடும். இதனால் எரிபொருள் பாயும் குழாய்கள் மற்றும் வடிகட்டிகளில் அடைப்பு ஏற்பட்டு, ராணுவ டாங்கிகள் மற்றும் வாகனங்கள் நடுவழியில் ஸ்தம்பித்து நிற்கும் சூழல் உருவாகும்.

பெரும் சவால்

எதிரிகளை விட இந்த கடுமையான குளிரே இந்திய வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்த சவாலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ராணுவமும் முன்னணி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் கைகோர்த்து இந்த டீசலை உருவாக்கியுள்ளனர்.

மைனஸ் 42 டிகிரி

இந்த சிறப்பு டீசல் மைனஸ் 42 டிகிரி செல்சியஸ் வரையிலான மிக கடுமையான உறைபனியிலும் துளிக்கூட உறையாது! இதனால் எல்லை பகுதிகளில் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் ராணுவ தளவாட வாகனங்கள் தடையின்றி, மிக துரிதமாக இயங்கும். இது ராணுவத்திற்கு மட்டுமல்லாமல், மலைப்பகுதிகளில் வாழும் பொதுமக்களின் வாகன பயன்பாட்டிற்கும் போகிறது.

தளபதி புகழாரம்

இந்நிகழ்ச்சியில் பேசிய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் தீரஜ் சேத், "இந்த உள்நாட்டு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு இந்திய ராணுவத்தின் செயல்பாட்டு திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கடுங்குளிரில் வாகனங்களை ஸ்டார்ட் செய்ய வீரர்கள் பட்ட அவதி இனி இல்லை. இது நமது வீரர்களின் பாதுகாப்பையும், மன உறுதியையும் பன்மடங்கு உயர்த்தும் ஒரு திருப்புமுனை" என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.