நகரி,
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள கர்லபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜு (வயது 41), விவசாயியான இவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி பக்கத்து வீட்டு வளாகத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதை அறிந்த ராஜு கன்றுக் குட்டியை காப்பாற்றுவதற்காக மோட்டாருக்காக அமைத்திருந்த குழாய் உதவியுடன் கிணற்றில் இறங்கினார்.
அவர் கன்று குட்டியை கயிற்றில் கட்டியதும் மேலே இருந்த அவரது மகன் பவன்குமார் (வயது 22) அதை வெளியே இழுத்து காப்பாற்றினார். அதன் பிறகு தந்தையை மேலே கொண்டுவர மீண்டும் மகன் கயிற்றை விட்டார். அதை இடுப்புக்கு கட்டிக்கொண்டு மேலே வந்த சமயத்தில் ராஜு நிலை தடுமாறி மீண்டும் கிணற்றில் விழுந்து விட்டார்.
அப்பகுதி மக்கள் உதவியுடன் இரண்டு மூன்று முறை முயற்சி செய்த போதிலும் ராஜுவால் மேலே வர முடியவில்லை. இத்துடன் தந்தையை காப்பாற்ற பவன்குமாரும் கிணற்றில் இறங்கினார். அவர் இடுப்புக்கு கயிற்றை கட்டி மேலே இழுத்து வந்த பொழுது இருவருமே தவறி மீண்டும் கிணற்றில் விழுந்தனர்.
அதன் பிறகு அதே கிராமத்தை சேர்ந்த மல்லேஷ் என்பவர் கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கினார். அவர் மூச்சு திணறுவதாக கூறி அவர்களை காப்பாற்ற முடியாமல் வெளியே வந்துவிட்டார். இதற்குள் ராஜு,பவன் குமாருக்கு ஆக்சிஜன் சரியாக கிடைக்காததால் மெல்ல மெல்ல தண்ணீரில் மூழ்கினர்.
இதனையடுத்து கிராமத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரை இழந்ததால் அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.