புதுடெல்லி,
டெல்லி சி.ஆர்.பார்க் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மகன் கரண். இவர்கள் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கரண் நேற்று தனது குடியிருப்பு பகுதிக்கு வெளியே நின்று கொண்டு ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது அந்த நபர், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து கரணை சரமாரியாக வெட்டினார். சத்தம் கேட்டு ஓடி வந்த ராகேஷ், தனது மகனை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் அந்த நபர் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, தந்தையும், மகனும் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்தனர். அவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் அவர்களை சோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் இந்த இரட்டைக் கொலை நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.