நகரி,
தெலுங்கானா மாநிலம் புவனகிரி மண்டலத்திலுள்ள அனுமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு. வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர் தன்னை போன்ற மாற்றுத்திறனாளியான நாகமணி என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் நித்யஸ்ரீ என்ற மகள் இருந்தாள்.
குழந்தை பிறந்ததில் இருந்து தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நாகமணி பலமுறை தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட தகராறுக்கு பின்னர், குழந்தையுடன் சென்ற மனைவியை ஸ்ரீராமுலு சமாதானப்படுத்தி நான்கு நாட்களுக்கு முன் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இந்நிலையில், நாகமணியின் தந்தையான மல்லையா நேற்றுமுன்தினம் வந்திருந்தார். தாத்தாவை கண்டதும் குழந்தை நித்யஸ்ரீ அவரிடம் ஓடி சென்றது. இதைப் பார்த்த ஸ்ரீராமுலு, மனைவி மீண்டும் வீட்டை விட்டு தந்தையுடன் சென்று விடுவார் என்ற அச்சத்தில் குழந்தையை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றார். தாத்தாவிடம் இருந்து பிரித்ததால் குழந்தை வீறிட்டு அழுதது. அதை அமைதிப்படுத்த மூக்கையும், வாயையும் சேர்த்து ஸ்ரீராமுலு கையால் பொத்தியிக்கிறார். இதில் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது.
தம்பதியினருக்கு இடையேயான குடும்ப பிரச்சினைகளே குழந்தையின் கொலைக்கு வழிவகுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். காது கேளாத மற்றும் பேசும் திறனற்றவரான ஸ்ரீராமுலு, குற்றத்தை செய்த பிறகு போலீசாரிடம் சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.