தேசிய செய்திகள்

6-வது மாடியில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை

ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த பெண் என்ஜினீயர், தனது 6 மாத பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு 6-வது மாடிக்கு சென்று, திடீரென அங்கிருந்து குழந்தையுடன் கீழே குதித்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஈஷா (வயது 37). மராட்டியத்தைச் சேர்ந்த இவர் பெண் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒரு குழந்தைக்கு 8 வயதும், மற்றொரு குழந்தைக்கு 6 மாதமும் ஆகிறது.

6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை:

நேற்று முன்தினம் ஈஷாவின் கணவரும், மூத்த மகளும் கடைக்கு சென்றுவிட்டனர். அப்போது தனது குழந்தையை தூக்கிக்கொண்டு 6-வது மாடிக்கு சென்ற ஈஷா திடீரென அங்கிருந்து குழந்தையுடன் கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த ஈஷா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

குழந்தை உயிர்தப்பியது:

அதிர்ஷ்டவசமாக குழந்தை உயிர்தப்பியது. அதாவது மேலே இருந்து குதித்தபோது குழந்தை அணிந்திருந்த ஆடை ஒரு இரும்பு கம்பியில் சிக்கியது. இதனால் குழந்தை கீழே விழவில்லை. கம்பியில் சிக்கிய குழந்தையை அருகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2-வது குழந்தை பிறந்ததில் இருந்து ஈஷா மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.