தேசிய செய்திகள்

உயிரியல் ஆயுதம் கருத்து: நடிகையும் மாடலுமான ஆயிஷா சுல்தானாவுக்கு போலீசார் நோட்டீஸ்

‘உயிரியல் ஆயுதம்’ என கருத்து தெரிவித்த சினிமா நடிகையும், மாடலுமான ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

இந்திய யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவும் ஒன்று. மொத்தம் 36 தீவுக்கூட்டங்களை லட்சத்தீவுகள் உள்ளடக்கியுள்ளது. இதில் 10 தீவுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். 11-வது தீவில் வணிக பயன்பாட்டிற்காக ஓட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவராக பிரபுல் ஹோடா படேல் செயல்பட்டுவருகிறார். பிரபுல் ஹோடா படேல் தலைமையிலான நிர்வாகம் லட்சத்தீவில் பல்வேறு சட்டத்திருத்தங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடைவிதிக்கவும், மது அருந்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், சட்டவிரோதமாக மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிசைகளை அப்புறப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட உள்ளது.

இந்த நடவடிக்கைகள் லட்சத்தீவுகளில் சுற்றுலாத்துறையை மேற்படுத்த எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் சமூக எதிர்ப்பு தடுப்பு சட்டமும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது அவர்களின் படகுகளில் அரசு அதிகாரி ஒருவரும் பயணிப்பார் என தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

லட்சத்தீவுகளில் பெரும்பான்மை மக்கள் தொகையாக இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் உள்ள நிலையில் நிர்வாகத்தின் சீர்திருத்தங்களுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது.பிர்புல் ஹோடா படேலை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது.

இந்த விவகாரம் லட்சத்தீவுகளுக்கு அருகில் உள்ள கேரள மாநிலத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தினமும் விவாதங்களும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், லட்சத்தீவு விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள பிரபல செய்தி தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவாதம் ஒன்று நடைபெற்றது. அந்த விவாத நிகழ்ச்சியில் லட்சத்தீவுகளில் ஒன்றான ஷட்லட் தீவை சேர்ந்த சேர்ந்த பிரபல பெண் டைரக்டரும், நடிகையும், சமூகசெயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானா பங்கேற்றார்.

கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக (Bio Weapon) மத்திய அரசு பயன்படுத்துகிறது. பிர்புல் ஹோடா படேலை மத்திய அரசு உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது என கூறினார். தொலைக்காட்சி விவாதத்தின் போது உயிரியல் ஆயுதம் என தெரிவித்த கருத்து தொடர்பாக ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.கவரட்டி போலீசார் தாக்கல் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 ஏ (தேசத்துரோகம்) மற்றும் 153 பி (வெறுப்பு பேச்சு) பிரிவுகளின் கீழ் சுல்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாள தொலைக்காட்சி விவாதத்தின் போது லட்சதீவில் கொரோனா வைரஸ் பரவியது குறித்து சுல்தானா தவறான செய்திகளை பரப்பியதாக பா.ஜ.க.வின் லட்சத்தீவு பிரிவு தலைவர் அப்துல் காதர் கவரட்டி போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து சுல்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

லட்சத்தீவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு மத்திய அரசு உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தியதாக சுல்தானா குற்றம் சாட்டியிருந்தார்.

லட்சத்தீவில் சேதியாத் தீவைச் சேர்ந்தவர் ஆயிஷா சுல்தானா. சினிமா இயக்குனரும், மாடலும் நடிகருமான சுல்தானா பல மலையாள திரைப்பட தயாரிப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

முன்னதாக, ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க. போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில் சுல்தானா மலையாள தொலைக்காட்சி சேனலில் அவர் கூறிய கருத்துக்கள் தொடர்பாக ஜூன் 20 ஆம் தேதி போலீசில் ஆஜராகுமாறு கவரட்டி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

கவரட்டி சப் இன்ஸ்பெக்டர் அமீர் பின் முகமது வழங்கிய நோட்டீசில் சிஆர்பிசியின் 124 ஏ மற்றும் 153 பி கீழ் குற்றச்சாட்டுகள் உள்ளன, இவை இரண்டும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் ஆகும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்